எனது அமைச்சின் கீழ் இருந்த கஹட்ட கிரபைட் நிறுவனத்துடைய தலைவராக இருந்து அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக மிகவும் நேர்மையான முறையில் செயல்பட்ட ஒரு பொறுப்பு மிக்க நிர்வாகி!!
எனது அமைச்சின் கீழ் இருந்த கஹட்ட கிரபைட் நிறுவனத்துடைய தலைவராக இருந்து அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக மிகவும் நேர்மையான முறையில் செயல்பட்ட ஒரு பொறுப்பு மிக்க நிர்வாகி!!
– மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் அனுதாபம்
பொத்துவில் மண்ணின் பெருமைமிகு புதல்வரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான மீராசாஹிபு அப்துல் மஜீட் (SSP) அவர்களின் மறைவு குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஆழ்ந்த கவலை மற்றும் இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
பொது வாழ்வு, அரசியல் சேவை மற்றும் காவல்துறை நிர்வாகம் ஆகிய துறைகளில் மீராசாஹிபு அப்துல் மஜீட் அவர்கள் ஆற்றிய பங்களிப்புகள் நீண்ட காலம் நினைவுகூரப்பட வேண்டியவை எனக் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறையில் உயர்பதவிகளை வகித்த அவர், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுவதில் நேர்மை, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அதிகாரியாக அறியப்பட்டார். பின்னர் அரசியலுக்குள் பிரவேசித்த அவர், மக்களின் நலன்களை முன்னிறுத்திய மக்கள் பிரதிநிதியாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் சமூக, கல்வி மற்றும் அபிவிருத்தி சார்ந்த விடயங்களில் அவர் வெளிப்படுத்திய அக்கறை மக்களிடையே அவருக்கு தனித்துவமான மரியாதையைப் பெற்றுத் தந்தது.
பொத்துவில் மற்றும் அம்பாறை மாவட்ட மக்களுடன் நெருக்கமான உறவைப் பேணிய அவர், இன, மத வேறுபாடுகளைக் கடந்து சமூக நல்லிணக்கத்திற்காகவும் பிராந்திய முன்னேற்றத்திற்காகவும் செயற்பட்டவர் என அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் மதிப்பிடப்பட்டார்.
தனது நிர்வாக அனுபவத்தையும் அரசியல் அனுபவத்தையும் மக்களின் நலனுக்காக பயன்படுத்திய அவர், கிழக்கின் மூத்த அரசியல் ஆளுமைகளில் ஒருவராகக் கருதப்பட்டார்.
எம்முடனும் எமது அரசியல் கட்சிகளுடனும் மிகவும் நெருக்கத்துடனும் முக்கிய பதவிகளை வகித்து கட்சியின் வளர்ச்சிக்கும் குறிப்பாக பொத்துவில் பிரதேசத்தின் அரசியல் வரவுக்கும் மிகவும் அர்ப்பணிப்புடன் பங்காற்றிய ஒரு சிறந்த ஆளுமை மிக்கவராக மர்ஹூம் (எஸ்.எஸ்.பி )மஜீத் அவர்கள் இருந்து வந்துள்ளார்கள்.
அது போன்று எனது அமைச்சின் கீழ் இருந்த கஹட்ட கிரபைட் நிறுவனத்துடைய தலைவராக இருந்து அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக மிகவும் நேர்மையான முறையில் செயல்பட்ட ஒரு பொறுப்பு மிக்க நிர்வாகியாகவும் அவரை நாம் இந்த வேலையில் நினைவு கூறுவது மிகவும் பொருத்தமாகும்.
அவரது மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது, நண்பர்கள், அரசியல் சகாக்கள், பொத்துவில் பிரதேச மக்கள் மற்றும் நாட்டின் முஸ்லிம் சமூகத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
குறிப்பாக பொதுச் சேவையிலும் அரசியல் துறையிலும் அவருடன் இணைந்து பணியாற்றியவர்களுக்கு இந்த இழப்பு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மீராசாஹிபு அப்துல் மஜீட் அவர்களை இழந்து துயருறும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ள ரிஷாத் பதியுதீன்,மேலும், “அல்லாஹ் (ஸுப்ஹானஹு வதஆலா) அன்னாரின் பாவங்களை மன்னித்து, அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனபதியை வழங்குவானாக. இந்த பேரிழப்பைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமையையும் பொறுமையையும் அவரது குடும்பத்தினருக்கு அருள்வானாக” எனவும் அவர் தனது இரங்கல் செய்தியில் பிரார்த்தித்துள்ளார்.